Wednesday, February 17, 2010

"மது அருந்துதல்" சில உண்மைகள்

இஸ்லாத்தின் பார்வையில் "மது அருந்துதல்"!

மது அருந்துதல் குறித்த இறைவனின் எச்சரிக்கை:
“(நபியே!) மதுபானத்தையும், சூதாட்டத்தையும் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்; நீர் கூறும்; “அவ்விரண்டிலும் பெரும் பாவம் இருக்கிறது; மனிதர்களுக்கு (அவற்றில் சில) பலன்களுமுண்டு; ஆனால் அவ்விரண்டிலும் உள்ள பாவம் அவ்விரண்டிலும் உள்ள பலனைவிடப் பெரிது.” (அல்குர்ஆன் 2: 219)பார்வையில்

மது அருந்துதல் ஷைத்தானின் அருவக்கத்தக்க செயலாகும்: -
ஈமான் கொண்டோரே! மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும், அம்புகள் எறிந்து குறி கேட்பதும், ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும்; ஆகவே நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் – அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள். நிச்சயமாக ஷைத்தான் விரும்புவதெல்லாம், மதுபானத்தைக் கொண்டும், சூதாட்டத்தைக் கொண்டும் உங்களிடையே பகைமையையும், வெறுப்பையும் உண்டு பண்ணி அல்லாஹ்வின் நினைவிலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்து விடத்தான்; எனவே, அவற்றை விட்டும் நீங்கள் விலகிக் கொள்ள மாட்டீர்களா? (அல்-குர்ஆன் 5:90-91)

மது அருந்துபவர் மற்றும் மதுவுடன் தொடர்புடையவர்கள் அல்லாஹ் மற்றும் நபி (ஸல்) அவர்களால் சபிக்கப்பட்டவராவர்:
மது அருந்துபவர், அதனை அருந்தச் செய்பவர், வாங்குபவர், விற்பவர், தயாரிப்பாளர், சுமப்பவர், இதன் மூலம் கிடைத்த வருவாயை சாப்பிடுபவர்கள் அனைவரையும் நபி (ஸல்) அவர்கள் சபித்துள்ளார்கள். (ஆதாரங்கள் : அபூதாவுத், திர்மிதி, இப்னுமாஜா)
மேற்கூறப்பட்ட ஹதீஸ் அஹ்மத், இப்னு ஹிப்பான் மற்றும் ஹாகிம் ஆகிய கிரதங்களில் இடம்பெறும் போது “அல்லாஹ் சபிக்கிறான்” என்று வந்துள்ளது.

மது அருந்துபவன் சுவனம் புக மாட்டான்:
மதுவில் மூழ்கி இருப்பவனும், பெற்றோரைத் துன்புறுத்துபவனும், தன் மனைவியின் மீது வீண்பழி சுமத்துபவனும் சுவனம் புகமாட்டான்” (ஹாகிம்)
“தொடர்ந்து மது அருந்துபவர், ஓடிப் போன அடிமை, தம் குடும்பத்தார்கள் செய்யும் தீய செயல்களைக் கண்டு திருப்தியடைந்தவர் ஆகிய இந்த மூவருக்கும் அல்லாஹ் சுவர்க்கத்தைத் தடை செய்திருக்கிறான்”

மது அருந்துபவர்களுக்கு மறுமையில் புகட்டப்படும் பானம்:
“போதைப் பொருளை அருந்துபவர்களுக்கு “தீனத்துல் கப்பால்” எனும் பானத்தை புகட்டுவதாக அல்லாஹ் முடிவு செய்துள்ளான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள், “தீனத்துல் கப்பால் என்றால் என்னவென்று” கேட்டனர். அது ‘நரகவாசிகளின் வேர்வை’ அல்லது ‘நரகவாதிகளிடம் பிழிந்தெடுக்கப்பட்ட பானம்’ என பதிலளித்தார்கள். அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி), ஆதாரம் : முஸ்லிம்.

மதுபோதையில் மரணித்தவன் சிலை வணங்கியைப் போலவனாவான்: -
நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: மதுபோதையில் மூழ்கியவன் இறந்துவிட்டால் சிலை வணங்கியைப் போன்று -மறுமையில்- அல்லாஹ்வை சந்திப்பான். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), ஆதாரம் : அஹமத்

போதை தரும் அனைத்துமே மதுவைச் சேர்ந்ததாகும்:
நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: போதை தரும் அனைத்தும் மதுவாகும். போதை தரும் அனைத்தும் ஹராமாகும். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), ஆதாரம் : முஸ்லிம்

வெ்வேறு பெயர்களில் புழங்கும் மது வகைகள் பற்றிய எச்சரிக்கைகள்:
‘என்னுடைய சமுதாயத்தில் சிலர் நிச்சயம் மது அருந்துவார்கள். ஆனால் அதற்கு வேறு பெயரைக் கூறிக் கொள்வார்கள்’ (அறிவிப்பவர் : அபூமாலிக் அல்-அஷ்அரி (ரலி), ஆதாரம் : இப்னுமாஜா)
‘விபச்சாரம் பெருகும், மது அருந்தும் பழக்கம் பரவலாகும்’ (ஆதாரம் : புகாரி, முஸ்லிம்)

மது அருந்தியவனுக்கு நபி (ஸல்) அவர்கள் கொடுத்த தண்டனை:
நபி (ஸல்) அவர்களின் காலத்தில் மது அருந்தியவனைப் பார்த்து, “அவனை அடியுங்கள்” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்பொழுது எங்களில் சிலர் செருப்பாலும், ஆடைகளினாலும் கரத்தாலும் அவனை அடித்தனர்.” (ஆதாரம் : புகாரி)

மது அருந்திய நிலையில் மரணித்தால் நரகில் நுழைவான்! அதிலிருந்து விடுபட்டு பாவமன்னிப்புக் கோரினால் அல்லாஹ் மன்னிப்பான்:
மது அருந்தி போதையடைந்தவனின் நாற்பது நாட்களின் தொழுகை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. அவன் அவ்வாறே இறந்துவிட்டால் நரகில் நுழைவான். தவ்பாச் செய்தால் அல்லாஹ் அவனை மன்னிப்பான். மீண்டும் மது அருந்தினால் அவனுடைய நாற்பது நாட்களின் தொழுகை ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. அவன் அவ்வாறே இறந்துவிட்டால் நரகில் நுழைவான். தவ்பாச் செய்தால் அல்லாஹ் அவனை மன்னிப்பான். மீண்டும் மது அருந்தினால் அவனுடைய நாற்பது நாட்களின் தொழுகை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. அவன் அவ்வாறே இறந்துவிட்டால் நரகில் நுழைவான். தவ்பாச் செய்தால் அல்லாஹ் அவனை மன்னிப்பான். மீண்டும் அருந்தினால் மறுமை நாளில் ரத்கத்துல் கப்பால் எனும் பானத்தை அல்லாஹ் அவனுக்கு புகட்டுவது கடமையாகிவிட்டது என்று நபி(ஸல்)அவர்கள் கூறியபோது, நபித்தோழர்கள் அல்லாஹ்வின் தூதர்(ஸல்)அவர்களே! ரத்கத்துல் கப்பால் என்றால் என்ன? என்று கேட்டனர். அதற்கவர்கள், நரகவாசிகளிடம் பிழிந்தெடுக்கப்பட்ட பானம் என்று பதிலளித்தார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர்(ரலி) நூல்: இப்னுமாஜா)

பாவமன்னிப்புத் தேடுதல்!

அல்லாஹ்விடத்தில் பாவமன்னிப்புத் தேடுதல் ஒவ்வொரு முஸ்லிமின் வாழ்விலும் மிக முக்கிய அம்சமாகும். ஏனெனில் அவன் பாவமற்றவனாகவே அல்லாஹ்வை சந்திக்க முயல்வான். எந்த மனிதனும் பாவத்திலிருந்து தப்புவது சாத்தியமற்றது என்ற வகையில் பாவமன்னிப்புத் தேடலே இதற்கு சிறந்த வழியாகும். இந்த வகையில் பாவமன்னிப்புத் தேடல் என்பது ஒரு முஸ்லிமின் அன்றாட நிகழ்ச்சி நிரலின் ஒரு மிக முக்கிய நிகழ்ச்சியாகும்.

பாவமன்னிப்புத் தேடல் என்பது கடமையான ஓர் அம்சமாகும். பெரும் பாவங்களை கவலைப்பட்டு, அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக்காக இறைஞ்சாதவரை அல்லாஹ் மன்னிக்கமாட்டான். அல்லாஹ்விடம் மன்னிப்புப் பெறாது பெரும் பாவங்களுடன் மரணிக்கும் முஸ்லிமின் நிலை மிகுந்த அபாயத்திற்குரியது. சிறு பாவங்கள் அன்றாட வணக்க வழிபாடுகளாலும், கஷ்டங்கள், துன்பங்களைப் பொறுமையாக ஏற்பதாலும் மன்னிக்கப்பட முடியுமாயினும், அவற்றிற்காகப் பாவமன்னிப்புக் கேட்டு விடுவதே சிறந்ததாகும். பாவமன்னிப்பின் போது சிறு பாவங்களை மன்னிக்குமாறு இறைதூதர் (ஸல்) அவர்கள் கேட்டுள்ளமை இதனைக் காட்டுகிறது.

"உங்களில் ஒருவன் பாலைவனத்தில் தனது ஒட்டகையைக் காணாமலாக்கி விட்டு பின்னர் அது கிடைத்து விட்டால் எவ்வளவு சந்தோசப்படுவானோ அதனை விட அல்லாஹ் தனது அடியான் பாவமன்னிப்புக் கோருவதால் சந்தோசமடைகிறான்" என‌ முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
ஆதார நூல்கள்: ஸஹீஹ் புஹாரி, ஸஹீஹ் முஸ்லிம்.

"அல்லாஹ்வின் மீது சத்தியமாக நான் அல்லாஹ்விடம் ஒரு நாளைக்கு எழுபது முறைகளுக்கு மேல் பாவமன்னிப்பு கேட்டு மீள்கிறேன்" என‌ முஹம்மது நபி(ஸல்) அவர்கள் சொல்வதை நான் கேட்டிருக்கிறேன்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
ஆதார நூல்கள்: ஸஹீஹ் புஹாரி, முஸ்னத் அஹ்மத்.

பாவங்களை விட்டும் பாதுகாக்கப்பட்ட இறைத்தூதர் (ஸல்) அவர்களே இவ்வாறு பாவமன்னிப்புக் கேட்டு வருவார்களாயின் அதன் முக்கியத்துவம் எவ்வளவு என்பதைப் புரிந்து கொள்ள முடியும். மேலும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பாவமன்னிப்புக்கு உலக ரீதியான சில விளைவுகளும் உள்ளன என விளக்குகிறார்கள். அதனைக் கீழ்வரும் ஹதீஸ் காட்டுகின்றது.

"யார் பாவமன்னிப்பை தொடர்ந்து கைக்கொண்டவராக இருக்கிறாரோ, அல்லாஹ் அவரது அனைத்து கவலைகளுக்கும் தீர்வைக் கொடுக்கின்றான். அவர் நினைத்திராத புறத்திலிருந்து அவருக்கு வாழ்க்கை வசதியினை செய்து கொடுக்கின்றான்"

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
ஆதார நூல்கள்: முஸ்னத் அஹ்மத், ஸுனன் அபூதாவூத்.

தான் புரிந்த பாவங்கள் குறித்து மிகுந்த கவலைக் கொள்வதே பாவமன்னிப்புக் கேட்பதன் அடையாளமாகும். பாவமன்னிப்புக் கேட்பதற்கான வார்த்தைகள் உள்ளத்திலிருந்து பிறக்க வேண்டும். அப்போதுதான் அது சரியான பாவமன்னிப்புக் கேட்டலாகிறது.

Tuesday, February 16, 2010

திக்ரின் சிறப்புகள்.

لاَإِلَهَ إِلاَّ اللهُ وَحْدَهُ لاَ شَرِيْكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ

லாஇலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீகலஹு லகுல் முல்கு வலஹுல் ஹம்து வஹுவ அலா குல்லி ஷைஇன் கதீர்.
என்ற திக்ரை ஒரு நாளைக்கு 100 தடவை ஓதிவருபவர்களுக்கு பத்து அடிமைகளை உரிமைவிட்ட நன்மை கிடைக்கிறது. அவருக்கு 100 நன்மைகள் எழுதப்படுகிறது. 100 தீமைகள் அழிக்கப்படுகிறது. மாலை வரை ஷைத்தானை விட்டும் பாதுகாப்புக் கிடைக்கிறது. இதனை விடவும் அதிகமாக திக்ர் (அமல்) செய்தவரைத் தவிர மற்ற எவரும் இவரைவிடச் சிறந்தசெயல் செய்தவராக முடியாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி), நூல்கள்: புஹாரி, முஸ்லிம்)

Monday, February 15, 2010

கணவரை மகிழ்விப்பது எப்படி?


மனைவியின் அழகிய வரவேற்பு:
பணியிலிருந்தோ அல்லது பயணத்திலிருந்தோ கணவன் வீட்டிற்கு வரும்போது அவரை நல்ல வார்த்தைகள் கூறி வாழ்த்துக்களுடன் வரவேற்று உபசரியுங்கள். முகமலர்ச்சியுடன் கணவரை எதிர்கொள்ளுங்கள்.
உங்களை அழகுபடுத்தி, உங்கள் கணவருக்குப் பிடித்தமான வாசனைத் திரவியங்களை பூசிக்கொள்ளுங்கள்.
சந்தோஷமான செய்தியை முதலில் தெரிவியுங்கள், கவலையான செய்தி இருந்தால் உங்கள் கணவர் அமைதி அடையும் வரை பிற்படுத்தி வையுங்கள்.
அன்பான, அரவணைப்பான வார்த்தைகளை உங்கள் கணவரிடத்தில் பயன்படுத்துங்கள் (வேலையிலோ அல்லது வரும் வழியிலோ ஏதாவது பிரச்சினைகளைச் சந்தித்திருக்கலாம்).
கணவருக்காக அக்கறையுடன் தயாரிக்கப்பட்ட உணவை சரியான நேரத்திற்குள் பரிமாறுங்கள் (கணவருடன் சேர்ந்து உண்ணும் வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொள்ளுங்கள்)

இனிய குரலும் தேவையான கனிவும்:
கணவரிடம் மென்மையான குரலில் அழகாக, அன்பாக பேசுங்கள். மேலும் மஹரம் இல்லாத ஆண்களுக்கு முன்னால் இவ்வாறு குழைந்து பேசக் கூடாது என்பதை மறந்துவிடவேண்டாம். உங்கள் கணவரிடத்தில் உம்!! இல்லை!! என்று சொல்லி அவரின் பேச்சை உதாசீனப்படுத்தாதீர்கள்.

நறுமணமும் அலங்கரிப்பும்:
உடலை அழகு-ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள சிரத்தையுடன் முயற்சி செய்யுங்கள். (வீட்டு வேலைகளை வேலைக்காரியோ அல்லது இயந்திரங்களின் உதவியோ இன்றி நாமே செய்ய முயற்சி செய்யவேண்டும். இதனால் உடல் ஆரோக்கியத்தையும் உடல் அழகையும் பேணுவதோடு பணச்செலவையும் குறைக்கலாம்)
உங்கள் கணவருக்கு அருகில் (மட்டும்) மெல்லிய ஆடைகளைப் பயன்படுத்துங்கள்.
தினமும் குளித்து உடலை சுத்தமாக வைத்துக்கொள்ளும் பழக்கத்தை மேற்கொள்ளுங்கள். குறிப்பாக மாதவிடாய் காலத்தில் சுத்தமாக வைத்துக்கொள்ளுவதில் அதிகமாக அக்கறைச் செலுத்துங்கள்.
வீட்டிற்கு கணவன் வருவதற்கு முன்னால் உங்களை அழகுபடுத்திக் கொள்ளுங்கள். (அழுக்கான ஆடையுடன் முகத்தில் எண்ணெய் வடிந்திருக்கும் நிலையில் உங்கள் கணவரிடம் செல்லாதீர்கள்)
தடுக்கப்பட்ட முறையில் அதாவது ஹராமான முறையில் அலங்கரித்துக் கொள்ளக்கூடாது. (உதாரணமாக புருவத்தை வழித்துக் கொள்ளுதல், ஒட்டுமுடி வைத்துக் கொள்ளுதல்)
கணவனுக்கு பிடித்தமான வாசனைத் திரவியம், கலர் துணிவகைகள் ஆகியவற்றை பயன்படுத்துங்கள்.
முடி அலங்காரம், வாசனைத் திரவியங்கள், உடையின் வண்ணம் மற்றும் மாடல் ஆகியவற்றை கணவன் ரசிக்கும்படி அடிக்கடி மாற்றுங்கள். இது போன்ற விஷயங்கள் மஹரம் இல்லாத ஆண்களுக்கு முன் செய்வது ஹராம் என்பதை நினைவிற் கொள்ளுங்கள்.
நபி (ஸல்) அவர்களிடம் வினவப்பட்டது: ‘எந்தப் பெண் (மனைவி) அனைவரையும் விடச் சிறந்தவள்?’ அண்ணலார் (ஸல்) அவர்கள் நவின்றார்கள்: ‘எந்தப் பெண் தன் கணவன் தன்னைப் பார்க்கும் போது அவனை மகிழ்விப்பாளோ, அவன் கட்டளையிட்டால் அவனுக்கு கீழ்ப்படிந்து நடப்பாளோ, தன் விஷயத்திலும், தன்னுடைய பொருளிலும் தன் கணவனுக்கு விருப்பமில்லாத எந்தப் போக்கையும் மேற்கொள்ளமாட்டாளோ அத்தகையவளே, அனைவரையும் விடச்சிறந்தவள்’. (நஸயீ)

அல்லாஹ் அருளியவைகளைக் கொண்டு திருப்தி கொள்வது:
கணவன் ஏழையாகவோ அல்லது சாதாரண வேலையிலோ இருந்தால் அதற்காக வாழ்க்கையை வெறுத்துவிடாதீர்கள். (பிறரின் கணவர்கள் போல் நீங்கள் இல்லையே என ஒப்புமையும் செய்யாதீர்கள். அது உங்கள் கணவருக்கு வெறுப்பை உருவாக்கும்).
ஏழைகள், உடல் ஆரோக்கியம் இல்லாதவர்கள், ஊனமுற்றோர்கள் போன்ற நம் நிலைக்கு கீழாக உள்ளவர்களை பார்த்தேனும் இறைவன் நம்மை இந்த நிலைக்கு உயர்த்தி வைத்திருப்பதை நினைத்து சந்தோஷப்படுங்கள்.

தன்னம்பிக்கையும் மற்றும் கணவருக்கு நீங்கள் அளிக்கும் ஊக்கமும்தான் உங்கள் வாழ்க்கையின் முன்னேற்றம் என்பதை மறந்துவிடாதீர்கள்.

ஆயத்துல் குர்ஸிய்யின் சிறப்பு!

கடமையான ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னரும் யார் ஆயத்துல் குர்ஸிய்யை ஓதுகின்றாரோ அவர் சொர்க்கம் செல்வதற்கு அவரின் மரணம்தான் தடையாக உள்ளது. (நபிமொழி, அறிவிப்பவர் : அபூ உமாமா -ரலி, நூல் : நஸயீ)

اللّهُ لاَ إِلَـهَ إِلاَّ هُوَ الْحَيُّ الْقَيُّومُ لاَ تَأْخُذُهُ سِنَةٌ وَلاَ نَوْمٌ لَّهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الأَرْضِ مَن ذَا الَّذِي يَشْفَعُ عِنْدَهُ إِلاَّ بِإِذْنِهِ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلاَ يُحِيطُونَ بِشَيْءٍ مِّنْ عِلْمِهِ إِلاَّ بِمَا شَاء وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالأَرْضَ وَلاَ يَؤُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ

அல்லாஹ்- அவனைத்தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறு இல்லை. அவன் என்றென்றும் ஜீவித்திருப்பவன், என்றென்றும் நிலைத்திருப்பவன், அவனை அரி துயிலே, உறக்கமோ பீடிக்கா, வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அவனுக்கே உரியன. அவன் அனுமதியின்றி அவனிடம் யார் பரிந்துரை செய்ய முடியும்? (படைப்பினங்களுக்கு) முன்னருள்ளவற்றையும், அவற்றுக்குப் பின்னருள்ளவற்றையும் அவன் நன்கறிவான். அவன் ஞானத்திலிருந்து எதனையும், அவன் நாட்டமின்றி, எவரும் அறிந்துகொள்ள முடியாது. அவனுடைய அரியாசனம் (குர்ஸிய்யு) வானங்களிலும், பூமியிலும் பரந்து நிற்கின்றது. அவ்விரண்டையும் காப்பது அவனுக்குச் சிரமத்தை உண்டாக்குவதில்லை - அவன் மிக உயர்ந்தவன்; மகிமை மிக்கவன். (அல்குர்ஆன்: 2:255)

Sunday, February 14, 2010

பாத்திமா(ரலி) அவர்களை பற்றி சில



* பாத்திமா(ரலி)அவர்கள் ரமலான் மாதம் பிறை 20-ல் மக்காவில் பிறந்தார்கள்.


* நபி(ஸல்) அவர்களுக்கு 4-வது பிள்ளை.


* பாத்திமா(ரலி)அவர்களின் தாயார் பெயர் கதீஜா(ரலி).


* ஹிஜ்ரி 2-ஆம் ஆண்டு திருமணம் நடந்தது.


* திருமணம் நடந்த‌து போது வயது 15ஆண்டுகள் 5மாதங்கள். கணவர் பெயர் அலி(ரலி).


* திருமணமாகி 2 வருடம் கழித்து குழ‌ந்தை பிறந்தது.


* மொத்தம் 6குழந்தைகள் 3ஆண் மக்கள் [ஹஸன்(ரலி), ஹுசைன்(ரலி),முஹ்ஷீன் (ரலி)]3பெண் மக்கள்[ருகையா(ரலி),உம்முகுல்தூம்(ரலி),ஜைனப்(ரலி)].


* பாத்திமா(ரலி)அவர்களின் மூன்றாவது ஆண் குழந்தையான‌ முஹ்ஷீன்(ரலி)குழந்தைபருவத்திலே இறந்தார்கள்.


* நபி(ஸல்) அவர்கள் இற‌ந்து 6 மாததிற்கு பின் பாத்திமா(ரலி) அவர்கள் இறந்தார்கள்.


* பாத்திமா(ரலி)அவர்களின் இறப்பின் போது அவர்களின் வயது 29 ஆகும்.


* மதீனாவில் ஜன்னத்துல் பகீ-யில் அடக்கம் செய்ய பட்டார்கள்.

Exhibition of Makkah Al-Mukarramah


Saturday, February 13, 2010

தொழுகைக்கு பின் ஓதவேண்டிய தஸ்பீஹ்கள்


"அஸ்தஃபிருல்லாஹ்".............. 3 தடவை

"ஆயத்துல் குர்ஸி" .................1 தடவை

"குல்ஹுவல்லாஹ்" ................1 தடவை

"குல்அஊதுபிரப்பில் ஃபலக்" .........1 தடவை

"குல்அஊதுபிரப்பின் னாஸ்"..........1 தடவை

"சுப்ஹானல்லாஹ்" ................33 தடவை

"அல்ஹம்துலில்லாஹ்" .............33 தடவை

"அல்லாஹ் அக்பர்" .................34 தடவை

"நான்காம் கலிமா" .................. 1 தடவை

பின்பு விருப்பம்போல் துஆ ஓதலாம்

முஸ்லிமின் உயர்ந்த பண்பு

ஒரு முஸ்லிமிற்கு மற்றொரு முஸ்லிம் மீது ஆறு உரிமைகள் உள்ளன.

1.நீஅவனைச் சந்திக்கும்போது ஸலாம் சொல்வது.

2.அவன் உன்னை விருந்திற்கு அழைத்தால் அதற்கு பதிலளிப்பது (ஏற்றுக் கொள்வது)

3.அவன் உன்னிடம் அறிவுரை கேட்டால் சரியான அறிவுரை கூறுவது

4.அவன் தும்மி ''அல்ஹம்துலில்லாஹ்'' என்றுகூறினால், அதற்கு (யர்ஹமுக்கல்லாஹ்என்று) பதிலளிப்பது.

5.அவன்நோய்வாய்ப்பட்டால், அவனை நலம் விசாரிப்பது.

6.அவன்மரணித்து விட்டால் அவனைப் பின் தொடர்ந்து (அடக்கம் செய்யச்) செல்வது'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.


வாழ்க்கைத்தரத்தில்) உங்களுக்குக் கீழிருப்போரை நீங்கள் பாருங்கள். உங்களுக்கு மேலிருப்போரை பார்க்காதீர்கள். ஏனெனில், அல்லாஹ் உங்கள் மீது புரிந்துள்ள அருட்கொடைகளை நீங்கள் சாதாரணமாகக் கருதாமலிருக்க அதுவே சரியானதாகும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்

நல்லவை மற்றும் பாவத்தைப் பற்றி நான் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு, ''நற்குணமே, நற்செலும் நன்மையுமாகும். எது உன் உள்ளத்தில் நெருடலை ஏற்படுத்துமோ எதை மக்கள் அறிந்து கொள்வதை நீ விரும்ப மாட்டாயோ அதுவே பாவமாகும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்

நீங்கள்மூன்றுபேர் (ஒன்றாக) இருக்கும் போது மக்களுடன் கலந்து விடும் வரை மூன்றாமவரை விட்டுவிட்டு இருவர் மட்டும் ரகசியமாக எதையும் பேச வேண்டாம். ஏனெனில் அது அவருக்கு வருத்தத்தை (கவலையை) ஏற்படுத்தும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்

ஒரு மனிதர் அமர்ந்திருக்கும் இடத்தில் நீங்கள் அமர்வதற்காக அவரை அந்த இடத்தை விட்டு எழுப்பாதீர்கள். மாறாக, சிறிது இடம் விட்டு விசாலமாக்கிக் கொள்ளுங்கள்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

உங்களுடன் எவரேனும் உணவு உண்டால் கை விரல்களைச் சுவைக்காத அல்லது சுவைக்கச் செய்யாதவரை தனது கையைக் கழுவ வேண்டாம்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

சிறியவர்பெரியவருக்கும், நடந்துசெல்பவர் அமர்ந்திருப்பவருக்கும், குறைந்தஎண்ணிக்கையிலுள்ளவர்கள் அதிகமான எண்ணிக்கையி லுள்ளவர்களுக்கும் ஸலாம் சொல்லட்டும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

முஸ்லிமுடைய மற்றோர்அறிவிப்பில் ''சவாரியில்செல்பவர் நடந்து செல்பவருக்கு (ஸலாம் சொல்லட்டும்)'' என்று உள்ளது.

(ஒருகூட்டத்தார் மற்றொரு கூட்டத்தாரைக் கடந்து செல்லும் போது) கூட்டத்தார் அனைவரின் சார்பாகவும் அவர்களில் ஒருவர் சலாம் சொல்வதும் மற்றொரு கூட்டத்தாரின் சார்பாக அவர்களில் ஒருவர் பதில் சொல்வதும் போதுமானதாகும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்

நீங்கள்கிறிஸ்தவர்களையும், åதர்களையும்சந்தித்தால் (முதலில்)நீங்கள் ஸலாம் சொல்லாதீர்கள். மேலும், குறுகிய பாதையில் அவர்களைச் செல்லச் செய்யுங்கள்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்

உங்களில் ஒருவர் தும்மினால் அவர் அல்ஹம்துலில்லாஹ் (அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்)'' என்று கூறட்டும். அவருடைய சகோதரர் அவருக்காக ''யர்ஹமுகல்லாஹ் (அல்லாஹ் உன்மீது கிருபை செய்யட்டும்)'' என்று கூறட்டும். தும்மியவர் அதைக் கேட்டு, ''யஹ்தீகுமுல்லாஹு வயுஸ்லிஹ் பாலகும்...... (அல்லாஹ் உமக்கு நேர்வழியைத் தந்து உமது நிலையை சீராக்கட்டும்) என்று கூறட்டும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

உங்களில் எவரும் நின்று கொண்டு குடிக்க வேண்டாம்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

உங்களில் ஒருவர் காலணியை அணிந்தால் தமது வலக் காலில் முதலில் அணியட்டும்.'' பின்னர் அதைக் கழற்றும் போது இடக் காலிலிருந்து முதலில் கழற்றட்டும். மேலும் அணியும் போது வலக் காலை முதலில் நுழைந்து; அதைக் கழற்றும் போது இடக்காலிலிருந்து முதலில் கழற்றட்டும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

உங்களில் ஒரு காலில் மட்டும் செருப்பணிந்து நடக்க வேண்டாம். இரு கால்களிலுமே அணிந்து கொள்ளட்டும். அல்லது இரண்டையும் கழற்றி விடட்டும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்

பெருமையடித்தவனாக தன்னுடைய ஆடையை பூமியில் பரவவிட்டு நடப்பவனை அல்லாஹ (மறுமையில்) ஏறெடுத்துப் பார்க்க மாட்டான்'' என்று நபி(ஸல்) அவர்கள்கூறினார்கள்.

நீங்கள் புசிக்கும்போது வலக்கரத்தால் புசியுங்கள். பருகும் போது வலக் கரத்தால் பருகுங்கள். ஏனெனில், நிச்சயமாக ஷைத்தான் தனது இடக் கரத்தால் புசிக்கிறான். மேலும் தனது இடக் கரத்தால் குடிக்கின்றான்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்

வீண்விரயம், மற்றும் பெருமையின்றி புசி, பருகு! உடுத்து!'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

பெரும் பாவங்கள்!

பெரும் பாவம், சிறிய பாவம் என்றால் என்ன? இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன? இவற்றை தவிர்த்துக் கொள்வது எப்படி? போன்றவற்றை புரிந்து கொள்வதற்காக எழுதப்பட்ட ஒரு சிறிய முயற்சி. நம் வாழ்க்கையின் தரம், இவற்றைப் பற்றிய அறிவை அறிந்துக் கொள்வதில் தான் உள்ளது.அல்லாஹ் திருமறையில் நம்முடைய “பெரும்பாவங்களை தவிர்ந்து கொள்ளாத வரையில் நம்முடைய சிறிய பாவங்களை மன்னிக்கமாட்டான்” என்று கூறுகிறான் (4:31)

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் “இந்த வசனத்திற்கு விளக்கம் அளிக்கையில், நாம் பெரும் பாவங்களை விட்டும் தவிர்ந்து கொண்டிருக்கும் நிலையில், ஐந்து நேரத் தொழுகை அவற்றுக்கு இடையே உள்ள சிறிய பாவங்களை களைந்து விடுகிறது. பெரும் பாவங்கள் நம்முடைய அமல்களை வீணாக்கி விடும்” என்று கூறினார்கள்.
ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு வழிபடுங்கள். இன்னும் இத்தூதருக்கு கீழ்ப்படியுங்கள் - உங்கள் செயல்களை பாழாக்கி விடாதீர்கள். (அல்-குர்ஆன் 47:33)
அறிஞர்கள், பெரும் பாவங்களின் தொகுப்பை பல நூல்களில் விளக்கி உள்ளனர். அவற்றில் ஒன்று தான் இமாம் அத்தஹபி அவர்களின் நூல். அது சுருக்கமாக தொகுக்கப்பட்டு குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் தரப்பட்டுள்ளது

1) அல்லாஹ்வுக்கு இணை வைத்தல்
வணக்கங்களில் அல்லாஹ்வுக்கு இணைவைத்தல் பெரிய (பாவமாகும்) இணைவைப்பு ஆகும்.
சிறிய இணைவைப்பு - ரியா : -
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்: “தஜ்ஜாலின் அபாயத்தை விட அதிகமான ஒன்றை உங்களுக்கு நான் அறிவிக்கவில்லையா? ஒரு மனிதன் தொழுகைக்காக நின்று, மக்கள் தன்னை பார்க்க வேண்டும் என்பதற்காக தன்னுடைய தொழுகையை அழகாக்குகிறார்” (இப்னு மாஜா)
2) கொலை செய்தல் (25:68)
3) சூனியம் செய்தல். (2:102)
4) தொழுகையை விட்டு விடுதல். (19:59)
5) ஜகாத் கொடுக்காமல் இருத்தல். (3:180)
6) காரணமில்லாமல் ரமலான் மாதத்தில் நோன்பு வைக்காமல் இருத்தல்.
7) வசதி இருந்தும் ஹஜ் செய்யாமல் இருத்தல்.
8.) பெற்றோருக்கு மாறு செய்தல். (17:23)
9) சொந்த பந்தங்களின் உறவை முறித்தல். (47:22)
10) விபச்சாரம் செய்தல். (17:30)
11) ஆண் புணர்ச்சி செய்தல்.
12) வட்டி வாங்குதல் & கொடுத்தல் (2:275)
13) அனாதைகளின் சொத்தை அபகரித்தல். 4(10)
14) அல்லாஹ்வின் மீதும் தூதர் மீதும் இட்டுக்கட்டுதல்.(39:60)
15) போர்க்களத்தில் இருந்து புறமுதுகு காட்டி ஓடுதல். (8:16)
16) ஒரு அரசனாக இருந்து கொண்டு தவறு செய்தல், ஏமாற்றுதல், அடக்கு முறைசெய்தல். (அஷ் ஷுஅரா:42)
17) தற்பெறுமை, ஆணவம் கொள்ளுதல். (அந் நஹ்ல்:23)
18) பொய் சாட்சி சொல்லுதல் (25:72)
19) போதை வஸ்துக்களை குடித்தல் (5:90)
20) சூதாடுதல் (5:90)
21) குற்றமில்லாத பெண்கள் மீது அவதூறு சொல்லுதல் (24:23)
22) போரில் கிடைத்த பொருளில் இருந்து மோசடி செய்தல் (3:161)
23) திருடுதல் (5:38)
24) கொள்ளை அடித்தல் (5:33)
25) தவறான சத்தியம் பிரமாணம் செய்தல்.
யாராவது ஒருவர் சத்தியப் பிரமாணம் செய்யச் சொல்லும்போது, ஒரு முஸ்லிமின் சொத்தை அபகரிப்பதற்காக தவறான சத்தியம் செய்தல், அவர் மறுமை நாளில் அல்லாஹ்வை சந்திக்கும் போது அல்லாஹ்வி கோபத்துக்கு ஆளாவார் (சஹீஹ் அல் ஜாமிஆ)
26) அடக்கு முறையை கையாளுதல்.
27) சட்டவிரோதமாக வரி விதித்தல்
திவாலானவர் யார் என்று தெரியுமா? மறுமை நாளில் தொழுது, நோன்பு நோற்று ஜகாத் கொடுக்கப்பட்ட ஒருவர் கொண்டுவரப்படுவார். ஆனால் அவர் மற்றவர்களை ஏசி, அவதூறு கூறி அவர்களுடைய சொத்துக்களை தவறான வழியில் எடுத்து, அவர்களின் இரத்தத்தை பூமியில் சிந்தியவராவார். அவர்களின் நல்ல அமல்கள் எடுக்கப்பட்டு அநீதி இழைக்கப் பட்டவர்களுக்கு கொடுக்கப்படும். அது முடிந்து விட்டால் இவர்களுடைய தீமைகள், பாவங்கள் அவர்களுக்கு கொடுக்கப்பட்டு நரகத்தில் வீசப்படுவார். (சஹிஹ் அல் ஜாமிஆ 87)
28) தடுக்கப்பட்ட உணவை உட்கொள்ளுதல். (2:188)
29) தற்கொலை செய்து கொள்ளுதல். (4:29)
30) தொடர்ந்து பொய் சொல்பவர் (3:61)
31) இஸ்லாமிய சட்டங்களை விட்டுவிட்டு மற்ற சட்டங்களை வைத்து ஆட்சி செய்பவர் (5:44)
32) லஞ்சத்தில் ஈடுபடுதல் (2:188)
33) பெண்கள் ஆண்களைப்போல அல்லது ஆண்கள் பெண்களை போல தோன்றுதல்
‘ஆண்களைப் போல தோன்றும் பெண்கள் மீதும் பெண்களைப் போல தோன்றும் ஆண்கள் மீதும் அல்லாஹ்வின் சாபம் உண்டாவதாக’ என முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (சஹீஹ் அல் ஜாமிஆ)
34) ‘தய்யூத்’ ஆக இருப்பது
‘தய்யூத்’ என்பவர், தன் வீட்டுப் பெண்களை அநாகரிகமான செயல்களைச் செய்வதற்கு அனுமதிப்பவரும், பொறாமைப்படுபவரும், இரண்டு பேர்களுக்கிடையே அருவருக்கத் தக்க செயல்களைச் செய்வதற்கு ஏற்பாடு செய்பவரும் ஆவார்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: -
“தொடர்ந்து மது அருந்துபவர், ஓடிப் போன அடிமை, தம் குடும்பத்தார்கள் செய்யும் தீய செயல்களைக் கண்டு திருப்தியடைந்தவர் ஆகிய இந்த மூவருக்கும் அல்லாஹ் சுவர்க்கத்தைத் தடை செய்திருக்கிறான்”
35) திருமணம் முடித்து, மனைவியை மற்றவர்களுக்காக கொடுப்பது.
36) சிறுநீர் கழித்துவிட்டு சுத்தம் செய்யாமல் இருப்பது.
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் ஒரு கல்லறையின் பக்கம் சென்ற போது சொன்னார்கள், “இவர்கள் இருவரும் மிகப் பெரும் விஷயத்துக்காக தண்டிக்கப் படவில்லை; ஒருவர் சிறுநீர் கழித்து சுத்தம் செய்யவில்லை; மற்றவர் கோள் சொல்லிக் கொண்டிருந்தார்” (சஹீஹ் அல் ஜாமிஆ)
37) மற்றவர்களுக்கு காண்பிப்பதற்காக செயல்படுவது (107:4-6)
38) உலக லாபத்துக்காக அறிவைப் பெறுதல் (2:160)

39) உடன் படிக்கையை முறித்தல் (8:27)
40) ஒருவர் செய்த உபகாரத்தை சொல்லிக் காட்டுவது (2:27)
41) களா கத்ரை மறுப்பது (54:49)
42) ஒட்டுக் கேட்பது (49:12)
43) கட்டுக் கதைகளை பரப்புவது (54:10)
44) மற்றவர்களை ஏசுவது ஒரு முஸ்லிமை ஏசுவது பாவமாகும், கொலை செய்வது இறை நிராகரிப்பாகும் (சஹிஹ் அல் ஜாமிஆ)
45) வாக்குறுதியை நிறைவேற்றாமல் இருப்பது

நயவஞ்சகனின் அடையாளங்கள் மூன்று என்று முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்: அவற்றில் ஒன்று வாக்குறுதி கொடுத்தால் அதற்கு மாறுசெய்வான். (புகாரி)
46) குறி சொல்பவர்களையும், ஜோசியத்தையும் நம்புவது.
“யார் ஒருவர் குறி சொல்பவரிடம் சென்று அவர் சொல்வதை நம்புகிறாரோ அவருடைய 40 நாள் தொழுகையை அல்லாஹ் ஏற்றுக்கொள்ள மாட்டான்” என்று முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

47) கணவனுக்கு மாறுசெய்வது (4:34)
48) துணிகளில், திரைச்சீலைகளில் உருவ படங்களை வரைதல்.
49) ஒருவரின் இறப்புக்காக அடித்துக் கொள்ளுதல், கதறி அழுதல், துணிகளை கிழித்துக் கொள்ளுதல், முடிகளை இழுத்தல்.
50) அநீதி இழைத்தல்
51) மற்றவர்களின் இயலாமையை தனக்கு சாதகமாக்கிக் கொள்ளுதல்.
52) அண்டை வீட்டார்களை துன்புறுத்துதல்.
“தன்னுடைய துன்புறுத்தலில் இருந்து யார் ஒருவரின் அண்டை வீட்டுக்காரர் பாதுகாப்பு பெறவில்லையோ அவர் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்”
53) முஸ்லீமை ஏசுவது, அவர்களை தொந்தரவு செய்வதும் (33:58)
54) கனுக்காலுக்கு கிழே ஆடை அணிவது
முஹம்மது நபி (ஸல்) அவர்கள், “யார் கனுக்காலுக்கு கிழே ஆடை அணிகிறார்களோ அவர்கள் நரக நெருப்பில் வீசப்படுவார்கள்” என்று கூறினார்கள். (புகாரி)
55) அல்லாஹ்வின் அடிமையை தொந்தரவு செய்வது.
56) தங்கம், வெள்ளி அணியும் ஆண்கள்
57) அடிமையை விட்டுவிட்டு ஓடி விடுவது
58) அல்லாஹ்வுக்கு அல்லாமல் மற்றவர்களுக்காக பலியிடுவது
59) உண்மைக்கு புறம்பாக, ஒருவரை இன்னாருடைய தந்தை என்று கூறுவது.
60) மற்றவர்களுக்கு காட்டுவதற்காக விவாதம் செய்வது.
61) மற்றவர்களுக்கு காட்டுவதற்காக விவாதம் செய்வது
62) அளவையில் மோசம் செய்தல் (83:1-3)
63) அல்லாஹ்வின் திட்டத்தில் இருந்து பாதுகாப்பு பெற்றதாக நினைப்பது
64) பன்றியின் இறைச்சி, இரத்தம் சாப்பிடுவது
65) காரணமில்லாமல், பள்ளி வாசலை விட்டு விட்டு, தனியாக தொழுவது
66) ஜும்ஆ தொழுகை, மற்றும் ஜமாஅத் தொழுகைகளை காரணமில்லாமல் தொடர்ச்சியாக தொழாமல் இருப்பது
67) செல்வாக்கை பயன்படுத்தி மற்றவர்களை தொந்தரவு செய்வது
68) பித்தலாட்டங்கள், வஞ்சகங்கள் செய்வது
69) முஸ்லீம்களை வேவு பார்ப்பது
70) சஹாபாக்களை நித்தனை செய்வது.

Friday, February 12, 2010

முதல் பதிவு

அல் குர்ஆன்

”மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்குச் சான்று வந்துள்ளது. உங்களிடம்
தெளிவான ஒளியையும் அருளியுள்ளோம்.’ (அல் குர்ஆன் 4:174)



மனித குலத்தின் ஈருலக வெற்றிக்கு கருவாக இருக்கின்ற திருமறைக்குர்ஆன் ஜாஹிலிய்யா காலம் தொட்டு இன்றைய நவீன காலம்வரை ஏற்படுத்திய மாற்றங் களையும், சாதித்த சாதனைகளையும் எழுத ஆரம்பித்தால் பேனாவின் மைக்குப்பிகள் முடிவுற்றுவிடும். மனித வரலாற்றில் சாதனை படைத்த சாதனையாளர்களின் பின்னணியில் தாக்கம் செலுத்துவது அல்குர்ஆனின் அறிவூட்டல்தான் என்பதை அறிந்துகொள்ள முடியும்.

இத்தகைய புனிதமிகு வேதம் எவ்வாறு இவ்வுலகிற்கு வருகை தந்தது என்பதில் மனித சமூகத்தில் இரு விதமான கோட்பாடுகள் காணப்படுகின்றன. இவற்றில் முஸ்லிம்களாகிய நாம் எதனை கடைப்பிடிக்க வேண்டும் என்பது தொடர்பாக இக்கட்டுரை அலசவிருக் கின்றது. இவற்றில் பூரண தெளிவில்லாமல் நாம் வணக்க வழிபாடுகளை மேற்கொள்வது உப்பில்லா பண்டம் குப்iயில் என்ற பழமொழிக்கு ஒத்ததாகத்தான் இருக்கும். அவைகளை பரத்தப்பட்ட புழுதிகளாகவே நாளை மறுமையில் நாம் காண்போம். எனவே அல்குர்ஆனை படிப்பதற்கு முன் அதன் வருகை பற்றி பூரண தெளிவை ஏற்படுத்திக்கொள்வது பொருத்தமென கருதுகின்றேன்.

முஸ்லிம்களாகிய நாம், திருமறைக்குர்ஆன், அருள் புரியப்பட்ட மகத்துவமிக்க இரவை தன்னகத்தே கொண்டுள்ள ரமழான் மாதத்தில் இறக்கியருளப்பட்டது எனும் நம்பிக்கை கோட்பாட்டில் வாழ்ந்து வருகின்றோம். அன்றைய ஜாஹிலிய சமூகத்திடம் மூட நம்பிக்கைகள், பெண் குழந்தைகளை குழி தோண்டிப் புதைப்பது இளம்பெண்களை ஆடு மாடுகளைப் போன்று நடத்துவது, மதுபாணங்களை அருந்துவது, தந்தை இறந்து விட்டால் தந்தையின் மனைவியோடு மகன் சேர்வது, நிர்வாணமாக நின்று கடவுள் ஆராதனைகளை மேற்கொள்வது, இன, மத வேறுபாடுகள் பார்ப்பது போன்ற இன்னும் பல தீய குணங்கள் மேலோங்கிக் காணப்பட்டது.

இத்தகைய இழி நிலைகளை அவதானித்துக் கொண்டிருந்த முஹம்மது நபி(ஸல்) அவர்கள் இவற்றில் தானும் பங்காளியாகிவிடக் கூடாது என்பதற்காக மக்காவிற்கு வெளியே உள்ள ‘ஹிறா’ எனும் குகைக்குச் சென்று இவற்றிற்கான மாற்று வழிகளை சிந்திக்கலானார்கள்.

பல நாட்களுக்கான உணவுகளை தயார்படுத்திக்கொண்டு அங்கேயே தங்கியிருந்தார்கள். இப்படி இருக்கும் நிலையில் வானத்தையும், பூமியையும் தொட்டுக்கொண்டிருக்கும் அளவுக்கு பிரமாண்டமான தோற்றத்தில் ஜிப்ரீல் எனும் மலக்கு திடீரென நபிகளாரை கட்டியணைத்து ‘ஓதுவீராக’ எனக் கூறிய போது தமக்கு ஓதத்தெரியாது என நபியவர்கள் சொல்ல மீண்டும் ‘ஓதுவீராக’ எனக்கூற அப்போதும் தெரியாது என பதிலளித்தார்கள். பிறகு நபியவர்களை மிகவும் இறுக்கமாக கட்டியணைத்துக் கொண்டு அல் குர்ஆனின் 96வது அத்தி யாயத்தில் இடம் பெறும் முதல் ஐந்து வசனங்களையும் ஓதிக் காண்பித்தார்கள்.

நபியவர்கள் அதிர்ச்சியுற்று அச்சம் கொண்டவர்களாக தனது மனைவி ஹதீஜாவிடம் வந்து விடயத்தைக் கூறினார்கள். ‘இறைவன்நிச்சயமாக உங்களை இழிவு படுத்தமாட்டான், நீங்கள் உறவுகளை சேர்ந்து வாழுகின்றீர்கள், ஏழைகளுக்கு வாரி வழங்கு கின்றீர்கள், மக்களுக்கு உதவுகின்றீர்கள். எனவே, அழ்ழாஹ் உங்களை கைவிடமாட்டான்’ என ஆறுதல் வார்த்தைகளை கூறினார்கள். பிறகு முந்தைய வேதங்களை திறம்பட கற்றறிந்த தனது உறவினர் வரகாவிடம் நபிகளாரை அழைத்துச் சென்று விடயத்தை முறையிட்டார்கள.

அவர் ‘நீர் இறைவனின் தூதராக நியமிக் கப்பட்டுள்ளீர், உம்மை உமது சமுதாயத்தினர் ஊரை விட்டு வெளியேற்றும் நிலையை நீர் அடைவீர். ஏனெனில் இதுதான் முன்சென்ற இறைத் தூதர்களின் நிலை என்றெல்லாம் ஆறுதல் படுத்தினார்கள்.’ (நூல்: புஹாரி-3)

இவ்வாறே நபிகளாருக்கு இறைச்செய்தி கொடுக்கப் பட்டது. இவ்வாறு ஆரம்பித்த வஹி 23 வருடங்களாக சிறிது சிறிதாக இறக்கி அருளப்பட்டது. இந்த வருகையைக் குறித்து அருள்மறை அல்குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது.

‘ரமழான் மாதம் எத்தகையதென்றால் அதில்தான் மனிதர்களுக்கு(முழுமையான) வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்ட தாகவும்;(நன்மை – தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல்குர்ஆன் இறக்கியருளப்பட்டது.’ (அல்குர்ஆன் 1:185).

மற்றுமொரு வசனத்தில் ‘இதனை நாம் அருள் பாலிக்கப்பட்ட இரவில் இறக்கி வைத்துள்ளோம்.’ (அல்குர்ஆன் 44:2). பிறிதொரு வசனத்தில் ‘இதனை(குர்ஆனை) மகத்துவமிக்க இரவில் இறக்கி அருளி யுள்ளோம்.’ (அல்குர்ஆன் 97:1).

மேற் கூறப்பட்ட வசனங்களை பார்க்கும் போது அல்குர்ஆனின் வருகையில் ஏதோ முரண்பாடு இருப்பது போன்று தோன்றுகிறது. சிலர் அவ்வாறு சித்தரித்தும் உள்ளனர். எனினும் உண்மையில் இவற்றில் எவ்வித முரண்பாடும் கிடையாது.

அல்குர்ஆன் 44:2ல் கூறப்படுகின்ற அருள்பாலிக்கப்பட்ட இரவு என்பது லைலதுல் கத்ர் எனும் மகத்துவமிக்க இரவு என்பதை அல்குர்ஆன் 97:1ஆம் வசனம் தெளிவுபடுத்துகிறது. இந்த மகத்துவமிக்க இரவு ரமழான் மாதத்தில் உள்ளது என்பதை அல்குர்ஆன் 185:1ஆம் வசனம் உணர்த்தி நிற்கின்றது. எனவே இம்மூன்று வசனங்களையும் கூர்ந்து கவனிக்கும் போது ஒன்றுக்கொன்று விளக்கமாக அமைந்துள்ளதே தவிர முரண்பாடுகள் கிடையாது என்பதை எம்மால் விளங்கிக்கொள்ள முடிகின்றது.

அடுத்து மற்றுமொரு சந்தேகமும் எழ வாய்ப்பு உள்ளது. அதாவது ரமழான் மாதத்தில் ‘லைலதுல் கத்ர்’ எனும் இரவில் அருள்மறை இறக்கியருளப்பட்டதென்றால் ஏனைய காலங்களில் இறக்கியருளப்படவில்லையா? 23 வருடங்களாக சிறிது சிறிதாக இறக்கியருளப்பட்டது என்பதுதானே இஸ்லாமிய வரலாறு கூறும் உண்மை? உண்மையில் இது ஒரு நியாயமான கேள்வியாகும். எனினும் அல்குர்ஆனின் வருகை குறித்து உள்ள அடிப்படையில் எமக்கு தெளிவு கிடைக்குமாயின் இச்சந்தேகம் எழ வாய்ப்பே இல்லை. திருமறைக் குர்ஆனுக்கு இரு விதமான வருகைகள் உள்ளன.